மே-18… உலக சமுதாயம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது, தமிழினம் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டதை அடையாளப் படுத்துவதற்கான நாள். “தமிழின அழிப்பு”, உலகப் பெரு வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கு நடுவில் மிலேச்சத்தனமாக அரங்கேறியதை நினைவுகூரும் நாள்.
நாம் நினைவுகூரும் அந்த நாளுடன் “தமிழினத்தை இனப்படுகொலை” செய்யும் நடவடிக்கை நின்றுவிடவில்லை; அது, பல வழிகளில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இந்த நாளை நினைவுகூருகின்ற நாம், சிங்கள இனவெறியர்களால் திட்டமிடப்பட்டு 2009 இற்குப் பின்னரும் எம்மை தொடர்ந்து அழித்துவரும் இனவழிப்புக் குறித்து நாம் பேசுகின்றோமா? அதனைத் தடுப்பதற்கு நாம் ஏதாவது செய்கின்றோமா??
தொடர்ந்துகொண்டிருக்கும் அந்த “இனவழிப்பு” ஒரு மென் தீவிரம் கொண்டது. சாதாரண கண்களுக்கு அது இனவழிப்பு எனப் புலப்படமாட்டாது. அரச அலகுகளுக்கு ஊடாகவும், அரசியலுக்கு ஊடாகவும், அரச சட்டங்களுக்கு ஊடாகவும், பூகோள வல்லரசுப் போட்டிகளுக்கு ஊடாகவும், பூகோளமயமாதல் (globalitation) ஊடாகவும், பொருளாதாரக் கவர்ச்சிகளுக்கு ஊடாகவும் இன்னும் எத்தனையோ மூலகங்கள் ஊடாகவும் “தமிழினவழிப்பு” துரித கதியில் நடைபெற்று வருகிறது.
இதனைத் தடுத்து நிறுத்தி, எமது இனத்தை அழிவிலிருந்து பாதுகாப்பது எப்படி? உலகத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக ஒன்றுபட்டு எழுச்சிகொள்ள வேண்டும்; உலக மக்களின் மனசாட்சியோடு பேசி அந்த மக்களின் அரசுகளோடு பேசவேண்டும். இது சாத்தியமா என்ற கேள்வியுள்ளது? கடந்த பதினோரு ஆண்டுகளில் “பாராளுமன்ற முன்றல் போராட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும்” எமக்கு எதிரான இனவழிப்பை சிறிதும் தடுத்ததுண்டா? இல்லாவிட்டாலும் அந்தப் போராட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்தே ஆகவேண்டும் – நீதி வேண்டிநிற்கும் தமிழினத்தின் தொடர்ச்சியான அமைதிவழிப் போராட்டங்களை வெளிப்படுத்துவதற்காக. அப்படியானால் வேறு என்ன செய்வது?
உலகம் எங்கும் தமிழர் பறந்து வாழ்கின்ற தேசங்களில் அந்த நாடுகளில் நமது இளையோரும் எமது மக்களும் ஓரணியில் அணிவகுத்து எமக்கான அரசியல் தளத்தை வலுவாக அமைத்து கொள்ளவேண்டும் அந்த மாற்றத்தின் மூலம் உலகத் தமிழ் இனத்தை ஒரு தேசிய இனமாக ஒன்றுபடச் செய்து, தமிழர்களுடைய உரிமைகளையும் இறைமையையும் மீட்டெடுக்கக் கூடியவகையில் செயலாற்ற முடியும். இது சாத்தியமா என்று சிந்திக்கவும் தோன்று. ஆனால், எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டுள்ள இன்றைய காலத்தில், அப்படி ஒரு மாற்றம் தமிழின வரலாற்றில் கட்டாயமானது.
ஆகவே, “மே-18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு” நாளை நினைவுகூருகின்ற உணர்வுபூர்வமான இந்த நாட்களில், நாங்கள் எமது இனத்தைப் பாதுகாப்பதற்காக “மாற்றம்” ஒன்றுக்காக உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும். எமது இனத்தைப் பாதுகாப்பதற்காகத் தமிழீழம் என்ற இலட்சியத்தில் உறுதியாக இருந்து தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடையாக்கிய எமது மாவீரர்களுக்கும் மக்களுக்கும் இவ்வேளை எமது வீர மரியாதையைச் செலுத்திக்கொள்வோமாக.
''இயலாத ஒன்று இருக்காது நமக்கு ''
''எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது.நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்''.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்